முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது புதிய நில அபகரிப்பு புகார்
சேலம்: நில அபகரிப்பு வழக்கில் கைதாகி கோவை சிறையில் இருக்கும் முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது கோவில் நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சேலம் அங்கம்மாள் காலனி நிலம் மற்றும் பிரீமியர் மில்ஸ் நில அபகரிப்பு வழக்குகளில் முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு கூட தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் மீது புதிதாக நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் இடைப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. அவர் சேலம் மாவட்ட எஸ்பி மயில்வாகனனைச் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நான் இடைப்பாடி கவுண்டம்பட்டி ஸ்ரீ அய்யனாரப்பன் கோவில் பரம்பரை பூசாரியாகவும், அறக்கட்டளை தலைவராகவும் உள்ளேன். இந்த கோவில் எனது குடும்பத்துக்கு உயில் மூலம் பாத்தியப்பட்டது. வன்னிய குல சத்திரியர் அய்யனாரப்பன் அறக்கட்டளை நிறுவப்பட்டு பதிவு செய்து நிர்வகித்து வரப்பட்டது. இது எங்களது குடும்ப கோவிலாகும்.
இந்த கோவிலுக்கு செல்வதற்கு வழித்தடம் மற்றும் பொங்கல் வைக்க இடமோ இல்லை. அதனால் 4.25 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினேன். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா ஆகியோருக்காக கல்லூரி கட்ட வேண்டியுள்ளது. அதனால் இந்த நிலத்தை ரூ. 12 லட்சம் வாங்கிக் கொண்டு கிரயம் செய்து கொடுத்துவிடு என்று எடப்பாடி திமுக நகர செயலாளர் ஜெயபூபதி கேட்டார். நான் மறுத்துவிட்டேன்.
2009-ம் ஆண்டு கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த 4 பேர் என்னை அழைத்துக் கொண்டு பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகம் வீட்டுக்கு சென்றனர். வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ராஜா ஆகியோர் என்னிடம் ரூ. 12 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஜெயபூபதி பெயருக்கு நிலத்தை எழுதிக் கொடு, இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா, திமுக நகர செயலாளர் ஜெயபூபதி ஆகியோர் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். நிலம் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் என்னுடைய சகோதரன் ஆறுமுகம் பெயருக்கு கிரயம் செய்து கொடுத்துவிட்டேன். அதன் பிறகு போலீசார் என்னையும் தம்பியையும் அழைத்து பேசினார்கள். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு நிலத்தை கொடுத்து விடு, இல்லையென்றால் உன்மீது பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டினார்கள்.
கோவிலில் பூஜை செய்யவும் விடமாட்டோம் என்றனர். நான் மறுத்ததால் கோவில் சாவியை பறித்துக் கொண்டு, அங்கிருந்த பஞ்சலோக சிலையையும் எடுத்துச் சென்றுவிட்டனர். ஆகவே அய்யனாரப்பன் கோவில் சொத்து, பஞ்சலோக சிலைகள், கோவிலுக்காக வாங்கிய 4.25 ஏக்கர் நிலம் ஆகியவற்றை அபகரித்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா, எடப்பாடி நகர திமுக செயலாளர் ஜெயபூபதி உள்பட 29 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகார் மனு சங்ககிரி டிஎஸ்பி ராமசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் இந்த புகார் குறித்து தீவிர விசராணை நடத்தி வருகின்றார்.