தமிழகத்தைப் போலவே புதுவையிலும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம்- முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதைப் போலவே புதுச்சேரியிலும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று யூனியன் பிரதேச முதல்வர் என்.ரங்கசாமி கூறியுள்ளார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டம். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்தத் திட்டம் அமலில் உள்ளது. அதேபோல பிற மாநிலங்களிலும் கூட இது அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில்தான் இது மிகப் பெரிய அளவில் கடந்த திமுக ஆட்சியின்போது அமலாக்கப்பட்டது.
இந்த நிலையில் இத்திட்டத்தை புதுச்சேரியிலும் அமல்படுத்துவதாக புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
நேற்று புதுவை இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவின்போது ரங்கசாமி பேசுகையில்,
காரைக்காலில் செயல்படுவது போலவே புதுச்சேரியிலும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனத்தில் முழுமையான உடல் நலப் பரிசோதனைக்கான வெளிப்புற சிகிச்சை பிரிவு விரைவில் ஏற்படுத்தப்படும்.
பள்ளி செல்லும் சிறுமிகளின் முழுமையான உடல் நலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் சிறப்பு பள்ளி சுகாதாரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மகப்பேறு மருத்துவமனை ஜூன் 2011 முதல் எல்லப்பிள்ளைச் சாவடியில் ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
புதுச்சேரி தினம்-ரங்கசாமி வாழ்த்து
இதற்கிடையே, புதுச்சேரியில் இன்று 49வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டபோது புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் வைத்திருந்தனர். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இன்று அறியப்படும் புதுவை, காரைக்கார், ஏனாம், மாஹே ஆகிய பகுதிகள் பிரெஞ்சு வசம் இருந்தது.
இந்தப் பகுதிகள் அனைத்தும் 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியாவுடன் இணைந்தன. இதுதொடர்பாக இந்திய, பிரெஞ்சு அரசுகளிடையே ஒப்பந்தமும் ஏற்பட்டது. 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி இந்தப் பகுதிகள் அனைத்தும் இணைந்த யூனியன் பிரதேசமாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டது.
இந்த தினம் புதுச்சேரி நிறுவன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று புதுச்சேரி மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், புதுச்சேரியை பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்து விடுவிக்கப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களும், அவர்களின் தியாகங்களும் நினைவு கூறத்தக்கவை, மதிக்கத்தக்கவை. புதுச்சேரியின் விடுதலைக்காகப் பாடுபட்ட அனைவரையும் நாம் நன்றியுடன் நினைவு கூறுவோம் என்று கூறியுள்ளார்.
நிறுவன தினத்தையொட்டி இன்று புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications