ரூ.1600 கோடி திருப்பூர் நிதி நிறுவன மோசடி: ஐஜி உள்ளிட்ட போலீஸ், வங்கி அதிகாரிகள் சிக்குகின்றனர்?
திருப்பூர்: ரூ. 1,600 கோடி நிதி மோசடி செய்த திருப்பூரைச் சேர்ந்த பாசி முதலீட்டு நிறுவன உரிமையாளர்களிடம் சிபிஐ 4வது நாளாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
திருப்பூரைச் சேர்ந்த கதிரவன், அவரது மகன் மோகன்ராஜ், சென்னையை சேர்ந்த கமலவள்ளி ஆகியோர் பாசி நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகர திட்டத்தை அறிவித்ததால், 48,000 பேர் 2008-2009-ம் ஆண்டு சுமார் ரூ. 1,600 கோடியை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
ஆனால், வாக்களித்தபடி உரிய வட்டியையோ அல்லது முதலீட்டையோ திரும்பத் தரவில்லை. மூவரும் பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டனர். இதையடுத்து புகார்கள் குவிந்ததால் கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து பல இடங்களில் ரெய்ட் நடத்தி சிபிஐ மூவரையும் கைது செய்தது. கோவை முதலீட்டாளர்கள் நலச் சட்ட சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
தாங்கள் திரட்டிய பணத்தை பல மாநிலங்களிலும், சில வெளிநாடுகளிலும் முடக்கி வைத்துள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். மோகன்ராஜ் தனக்கு இருதய நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார். பரிசோதனையின் போது அவருக்கு ரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று பொது பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
அதே நேரத்தில் கதிரவன், கமலவள்ளி ஆகியோரிடம் இன்றும் 4வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் ஒரு ஐஜி உள்ளிட்ட சில உயர் போலீஸ் அதிகாரிகளின் பெயர்களையும், வங்கி அதிகாரிகளின் பெயர்களையும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைவில் அந்த அதிகாரிகளும் சிக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications