கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு: கிராமத்தினர் தொடர் போராட்டம்
கூடன்குளம்: கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதம், தொடர் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ. 13 ஆயிரத்து 500 கோடி மதி்ப்பீட்டில் தலா 1000 மெகா வாட் உற்பத்தி திறன்கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் அணு உலையில் பணிகள் முடிவடைந்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடங்கப்பட இருக்கிறது.
இதற்காக முதல் அணு உலையில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அணு உலை மூலம் மின் உற்பத்தி துவங்கும் போது கூடன்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் அப்புறப்படுத்தபடுவார்கள் என்ற அச்சத்திலும், அணு உலை மூலம் கதிர்வீச்சு ஏற்படும் என்ற பீதியிலும் மக்கள் அணு உலையை எதிர்த்து போராடி வருகின்றனர்.
மேலும் கூடன்குளத்தை சுற்றியுள்ள இடிந்தகரை, செட்டிகுளம், விஜயபாதி, இருக்கன்துறை, லெவிஞ்சிபுரம் ஆகிய கிராம மக்கள் அணு உலையால் பாதிக்கப்படுவோமோ என்ற பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்ட கடற்கரை மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இடிந்தகரையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பள்ளி குழந்தைகள் வகுப்புகளை புறக்கணித்து உண்ணாவிரததி்தில் பங்கேற்றனர். வீடு, தெருக்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. உண்ணாவிரதத்தின் முடிவில் கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி கூடன்குளத்தில் இன்று முதல் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரததத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று உண்ணாவிரதத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன.
இதனிடையே இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் திடீர் என அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து கூடன்குளம், கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூந்தகுளி, உவரி, கூடுதாழை மற்றும் ராதாபுரம் சுற்றப்புர கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கூடன்குளம் நோக்கி வாகனங்களில் திரண்டு வந்தனர். கூடன்குளத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
தாமஸ் மண்டபம் பகுதியிலும் ஏராளமான போலீசார் குவி்க்கப்பட்டனர். அவர்கள் வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டத்திற்காக வந்த பொதுமக்கள் அனைவரும் கூடன்குளம் மாதா ஆலயம் முன் கூடினார்கள். ஆலய வளாகத்தில் அமர்ந்து பிரர்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது கூடியிருந்தவர்கள் அனைவரும் மவுனமாக அமர்ந்து இருந்தார்கள்.
இந்த போராட்டத்தில் பொது மக்களுடன் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கூடன்குளம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு குழந்தைகள், மாணவ,மாணவிகளை பெற்றோர் அனுப்பவில்லை. மேலும் சுமார் ஆயிரத்து 700 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால கூடன்குளத்தில் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications