காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி மீதான நில மோசடி புகார் வாபஸ்
காரைக்குடி: காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி மீது கொடுக்கப்பட்ட நில மோசடி புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
காரைக்குடி தாலுகா, நாட்டுச்சேரி அருகேயுள்ள அப்பளை கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பன்னீர்செல்வத்திடம் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளதாவது,
காரைக்குடி தாலுகா, நாட்டுச்சேரி குரூப்பில் அப்பளை கிராமம் உள்ளது. அப்பகுதியில் உள்ள 17 ஏக்கர் புஞ்சை தரிசு நிலங்கள் குடி பாத்திய உரிமையுடன் ஆதி திராவிட மக்களுக்கு கடந்த 31.3.1981ல் வழங்கப்பட்டது.
இந்த நிலங்களை காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித.பழனிச்சாமி சட்டத்திற்கு புறம்பாக, அப்பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரிடமிருந்து கிரயம் பெற்றதாக போலி ஆவணம் தயாரித்து தனது மனைவி பஞ்சவர்ணம் பெயரில் பட்டா மாறுதல் செய்துள்ளார்.
இது தொடர்பாக அப்பகுதி ஆதி திராவிட மக்கள் என்னிடம் முறையிட்டதின் பேரில், இது குறித்து கடந்த ஜூலை 17-ம் தேதி அன்று எம்.எல்.ஏ. பழனிச்சாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது குறித்து கேட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினார்.
எனவே, ஆதி திராவிட மக்களின் நிலத்தை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்துள்ள எம். எல். ஏ. சித. பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தான் இந்த விவகாரம் குறித்து உண்மை நிலையை அறியாமல் புகார் கொடுத்துவிட்டதாகக் கூறி அதை வாபஸ் பெற்றுள்ளார் கருப்பையா. இதனையடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications