இன்று இரவு முதல் லாரிகள் ஓடாது... தமிழகத்தில் மட்டும் ரூ 500 கோடி சரக்குகள் தேக்கம்!
சென்னை: தென்மாநில லாரி ஸ்ட்ரைக் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இந்த ஸ்ட்ரைக் காரணமாக தமிழகத்தில் மட்டும் ரூ 500 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென் மாநிலங்கள் முழுவதும் ரூ 4000 கோடி வரை இழப்பு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.
பெட்ரோல், டீஸல் விலை உயர்வு, அசாதாரண வரிவிதிப்பு போன்றவற்றை காரணம் காட்டி, தென்மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
காலவரையற்ற இந்தப் போராட்டம் காரணமாக லாரிகள் சரக்கு புக்கிங்கை 3 நாட்களுக்கு முன்பே நிறுத்திவிட்டன. இதனால் சரக்குகள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. அதேபோல வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வரவேண்டிய சரக்குகளும் தேங்கிக் கிடக்கின்றன.
தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் சரக்குகளை கொண்டு செல்கின்றன.
இந்த லாரிகள் அனைத்தும் போராட்டத்தில் பங்கேற்கின்றன. இன்று நள்ளிரவு போராட்டம் தொடங்கினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் லாரி ஸ்ட்ரைக் காரணமாக அத்தியாவசிய பொருள்கள் பரிமாற்றம் பாதிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, தமிழக போக்குவரத்து துணை கமிஷனர் முருகையா, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தினார்.
அத்தியாவசிய பொருள் போக்குவரத்துக்கு இடையூறு செய்ய மாட்டோம் என்றும், ஆனாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்றும் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications