அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை- பிரதமர்

அன்னா ஹஸாரே கைது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் கோரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து இன்று முற்பகல் 11 மணிக்கு லோக்சபா கூடியதும் பிரதமர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அவரது அறிக்கையின்போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து குறுக்கீடு செய்தபடி இருந்தனர்.
பிரதமர் கூறுகையில், தாங்கள் வகுத்து ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹஸாரே வலியுறுத்தினார். அதுகுறித்து அரசு பரிசீலித்த லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அது நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம்.
லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரினர். போலீஸாரும் நிபந்தனைகளுக்குட்பட்டு போராட்டத்தில் ஈடுபடலாம் என்று அனுமதித்தனர்.
ஆனால் அந்த நிபந்தனைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். மேலும் தடைகளை மீறுவோம் என்றும் தெளிவாக கூறினர். இதனால் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை போலீஸார் எடுக்கநேரிட்டது. வேறு வழியில்லாமல்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம், தடைகளை மீற மாட்டோம், நிபந்தனைகளுக்கு உட்படுவோம் என்று அவர்கள் கூறியிருந்தால் நிச்சயம் போராட்டத்தை அனுமதித்திருப்போம்.
உயர்ந்த நோக்கங்களுடன் அன்னா ஹஸாரே போராடி வந்தாலும் அவர் தவறான பாதையில் நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
அமைதியை நிலைநாட்ட போலீஸார் மிகக் குறைந்த அளவிலான நடவடிக்கையையே எடுத்துள்ளனர். நேற்றைய சம்பவம் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்.
ஊழலை ஒழிக்க எந்த மாய மந்திரமும் நம்மிடம் இல்லை. தற்போது தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் எதையும் தீர்க்க முடியும். நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் உறுப்பினர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
பிரதமர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு-அமளி-ஒத்திவைப்பு
அன்னா ஹஸாரே குறித்தும், டெல்லி போலீஸ் நடவடிக்கையை நியாயப்படுத்தியும் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய கருத்துக்களுக்கு எதிர் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் இறங்கினர்.
குறிப்பாக கேள்வி நேரம் தொடங்குவதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜை சபாநாயகர் மீரா குமார் பேச அழைத்தபோது அவர் பிரதமர் பேச்சை கடுமையாக சாடினார். இதற்குகாங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரும் எழுந்து குரல் எழுப்பவே அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
அத்வானி எழுந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை கடுமையாக எச்சரித்துப் பேசவே காங்கிரஸ் தரப்பு கொந்தளித்தது. நிலைமை மோசமாகவே சபையை ஒத்திவைத்து உத்தரவிட்டார் சபாநாயகர்.
ராஜ்யசபாவிலும் பிரதமர் விளக்கம்
இதற்கிடையே, பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபாவிலும் தனது விளக்கத்தை அளித்தார். அங்கும் அவரது பேச்சுக்கு அவ்வப்போது குறுக்கீடுகள் வந்தவண்ணம் இருந்தன.












Click it and Unblock the Notifications