பெரியாறு அணை விவகாரம்-கேரளாவைக் கண்டித்து மதுரையில் வைகோ, நெடுமாறன் உண்ணாவிரதம்
மதுரை: முல்லைப் பெரியாற்றிறன் குறுக்கே கேரளா புதிய அணை கட்டுவதைத் தடுக்கக் கோரியும், அணையின் நீர்மட்டத்தை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உயர்த்தக் கோரியும் மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது.
இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதத்தை பெரியார் திராவிடக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை ரயில் பெட்டி ஆலையில் சிங்களர்களுக்குப் பயிற்சி-வைகோ கண்டனம்
இந் நிலையில் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலையில் சிங்கள அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள மத்திய அரசின் பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், இலங்கையைச் சேர்ந்த 12 சிங்கள அதிகாரிகளுக்கு உயர் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதை எண்ணி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்வதையே தங்கள் அரசின் செயல்திட்டமாக வைத்து இருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
எனவே, மத்திய அரசின் ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் சிங்களர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி ம.தி.மு.கவினர் ஐ.சி.எப். தொழிற்சாலையை முற்றுகையிட்டு நேற்று கண்டனப் போராட்டம் நடத்தினார்கள்.
7 கோடி தமிழர்கள் குடிமக்களாக இருக்கும் இந்தியாவின் எந்த மூலையிலும் சிங்களர்களுக்கு எந்தவிதமான பயிற்சியும் அளிக்கக்கூடாது என்பதோடு, அவர்களை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications