பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுவிக்கக் கோரி 19ம் தேதி திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய கோரி, ஆகஸ்ட் 19ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அதன் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். 20 ஆண்டுகள் என்பது ஆயுள் தண்டனையைவிட அதிகம்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பித்த கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சம் பரவியுள்ளது. உலக அளவில் மரண தண்டனையே கூடாது என்ற கருத்து வலுப்பெற்று வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மரண தண்டனையை நிறைவேற்ற தீவிரம் காட்டுவது வியப்பாக உள்ளது.
ஒரு பேட்டரி வாங்க உதவி செய்தக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் என்ற தமிழக இளைஞரையும் தூக்கிலிடுவது இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை வலுப்படுத்துவதாக அமைகிறது.
இந்த மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நீக்கி, அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 19 ம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications