3 பேரை தாக்கிய இந்தியருக்கு 30 மாத சிறை விதித்தது ஆஸ்திரேலிய நீதிமன்றம்
மெல்பேர்ன்: ஆஸ்திரேலியாவில், 3 இந்தியர்களை தாக்கி காயப்படுத்திய இந்திய மாணவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 30 மாத சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்தவர் குர்தீப் சிங் மான் (25). ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில் படித்து வந்தார். கடந்த 2009ம் ஜூன் மாதம் மெல்பேர்ன் நகரின் தென் பகுதியில் உள்ள கிரின்ஹன்டி என்ற சாலையில் வாகனத்தில் வேகமாக சென்றார். அப்போது, சாலையை கடந்த 3 இந்தியர்கள் மீது வாகனம் மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த 3 பேரும் இந்திய மொழியில் திட்டுவதை கேட்ட காரில் இருந்த குர்தீப் சிங்கும், அவரது நண்பரும், காரை சிறிது தூரத்தில் நிறுத்தினர். பின்னர் காரில் இருந்து இறங்கி சென்று, சாலையை கடந்தவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரம் குறையாத இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது, குர்தீப் சிங் காரில் வைத்திருந்த சமையல் கத்தியை கொண்டு 3 பேரையும் தாக்கினார். அதில் அனைவரும் காயமடைந்தனர். இந்த வழக்கு, விக்டோரியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பிறகு குற்றசாட்டப்பட்ட குர்தீப் சிங்கிற்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதில், 18 மாதங்களுக்கு பரோலில் வெளியே வர முடியாது. சிறைத் தண்டனைக்கு பிறகு, குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, குர்தீப் சிங் மான் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications