போலீஸ் நிபந்தனைகள் வாபஸ்-இன்று முதல் 15 நாள் உண்ணாவிரதத்திற்கு அன்னா சம்மதம்
டெல்லி: போலீஸார் விதித்து வந்த பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, 15 நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அன்னா ஹஸாரேவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராம்லீலா மைதானத்தில் இன்று போராட்டம் தொடங்குகிறது.
நேற்று நள்ளிரவுக்கு மேல் 2 மணியளவில் இந்தத் தகவலை கிரண் பேடி வெளியிட்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட செய்தியில், டெல்லி போலீஸார் 15 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியும் என்று கூறுவதை அன்னா ஏற்றுக் கொண்டுள்ளார். போலீஸாரும் ஏற்றுக் கொள்ள முடியாத பல நிபந்தனைகளை கைவிட்டுள்ளனர். இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் அன்னா ராம் லீலா மைதானத்துக்கு வருவார் என்று தெரிவித்திருந்தார் பேடி.
மேலும், 3 மணிக்கு அன்னா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ராம்லீலா மைதானத்தில் தொடங்குவார். ராம்லீலா மைதானத்திற்கு வருவதற்கு முன்பு ராஜ்காட்டுக்கு அன்னா செல்கிறார். லோக்பால் மசோதாவை மக்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் அரசு அமல்படுத்த முன்வர வேண்டும்.
எந்தவித நிபந்தனைகளையும் டெல்லி போலீஸ் விதிக்கவில்லை. அவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்று அன்னாவை நிர்ப்பந்திக்கவில்லை. மேலும் ஏற்கனவே கூறி வந்த நிபந்தனைகளையும் அவர்கள் கைவிட்டுள்ளனர்.
மேலும் 15 நாட்களுக்கு மேலும் போராட்டத்தை நீட்டிக்கும் வாய்ப்புகள் உண்டு. அதற்கும் போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தார் பேடி.
நேற்று கிரண் பேடி உள்ளிட்ட அன்னா உதவியாளர்கள், டெல்லி காவல்துறை ஆணையரை சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்பின்போது அன்னா தரப்பு நியாயத்தை அவர்கள் எடுத்து வைத்தனர். இதையடுத்து போலீஸ் தரப்பிலும் சற்று இறங்கி வந்தனர். அன்னா தரப்பும் தனது கோரிக்கையை சற்று தளர்த்தியது. இதன் மூலம் சிக்கல் தீர்ந்தது.
முன்னதாக 7 நாள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மேலும் போராட்டத்தை ராம் லீலா மைதானத்தில் நடத்த வேண்டும் என்றும் கூறியது காவல்துறை. இதற்கு அன்னா தரப்பு ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு மாத காலம் போராட்டம் நடத்த தங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்று அவர்கள் கூறி வந்தனர். இதனால் இழுபறி நீடித்து வந்தது. இதன் காரணமாக அன்னா ஹஸாரே திஹார் சிறையை விட்டு வெளியே வர மறுத்து விட்டார்.
தற்போது இழுபறி முடிவுக்கு வந்த நிலையில் அன்னா இன்று சிறையிலிருந்து வெளியே வரும் நிலை உருவாகியுள்ளது.
அன்னா ஹஸாரே ராம்லீலா மைதானத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குவதால் அங்கு தொண்டர்கள் குவிய ஆரம்பித்துள்ளனர். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் அன்னா ஹஸாரேவை வரவேற்க திஹார் சிறைக்கு வெளியிலும் பெரும் திரளானோர் காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications