நில அபகரிப்பு: திமுக கவுன்சிலர், ஆதரவாளருக்கு குண்டாஸ்
சென்னை: பல நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்புடைய திமுக கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெருங்குடி திமுக செயலாளராகவும், கவுன்சிலராகவும் இருப்பவர் எஸ்.வி. ரவிச்சந்திரன்(46). அவரது ஆதரவாளர் கான்டிராக்டர் மக்பூல் ஜஹான்(49). 5 நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்புடைய அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த இருவரும் வேளச்சேரியில் காலி இடங்கள் இருக்கிறதா என்று தேடுவார்கள். அவ்வாறு இருந்தால் அதை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டிவிடுவார்கள். நிலத்தின் உரிமையாளர்கள் வந்து கேட்டால் அவர்களை மிரட்டி, நிலத்தை பறித்துக் கொள்வார்கள்.
புவனேஷ்வரி நகரில் மட்டும் இந்த இருவரும் சேர்ந்து 8 தனியார் நிலங்களை அபகரித்து, கட்டிடங்கள் கட்டியுள்ளனர். அவர்கள் மீது புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. அவர்கள் மீது மோசடி, மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அபகரித்துள்ள நிலங்களின் மதிப்பு பல கோடி இருக்கும் என்று அடையார் துணை கமிஷனர் கே. ஏ. செந்தில் வேலன் தெரிவித்தார்.
நில அபகரிப்பு வழக்குகளில் கைதான திமுக கவுன்சிலர் மற்றும் கான்டிராக்டரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு சென்னை மாநகர கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.