மும்பை விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பெண் பூசாரிகள் அதிக அளவில் நியமனம்
விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் குறிப்பாக மும்பையில் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பத்து நாள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. அனைவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த விழாவில் பெண் பக்தர்கள் அதிகம் கூடுவார்கள். இதனையொட்டி மும்பை நகரில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மராட்டிய மாநிலத்தின் நகர அபிவிருத்தி துறை அமைச்சரும், மும்பை நகரின் பாதுகாவலருமான ஜெயந்தி படீல் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது:
மக்கள் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி கைவரிசை காட்டிவிடக் கூடாது என்பதற்காக போலீசார் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நகர் முழுவதும் அனைத்து இடங்களிலும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்குப் பூஜை செய்ய பூசாரிகள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக அளவில் பெண்களையும் பூசாரிகளாக நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எந்த ஒரு பகுதியையும் விடாதபடி கண்காணிக்க 3 ஆயிரம் இடங்களில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
பக்தர்களையும் நகருக்குள் வருபவர்களையும் சிசிடிவி மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலைகளை கரைப்பதற்கும் வாகனத்தில் எடுத்து செல்லவும் ஆகஸ்ட் 14-தேதிக்குள் அனுமதி பெற வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு விநாயர் சதுர்த்தியை ஒட்டி மும்பை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 1லட்சத்து 19 ஆயிரம் சிலைகள் நிறுவப்பட்டு கரைக்கப்பட்டன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை நிறுவவேண்டும் என்றும் அமைச்சர் ஜெயந்திபடீல் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் 13-தேதி மும்பை நகரின் மூன்று முக்கிய பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications