கள்ளத்தொடர்பு- ஓட்டப்பிடாரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் வெட்டிக் கொலை
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே கள்ளத் தொடர்பு காரணமாக பாலிடெக்னிக் மாணவர் வெட்டி கொல்லப்பட்டார்.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலசெய்தலையைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி பாலம்மாள். இவர்களுக்கு பாலமுருகன், சோலைச்சாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலமுருகன் சாயர்புரத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். முனீஸ்வரன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார்.
இந்நிலையில் பாலமுருகனுக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த நவதானிய வியாபாரி தங்கதுரையின் மனைவி சுசீலாவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த தங்கதுரை இருவரையும் கண்டித்தார். இருப்பினும் அவர்கள் தொடர்பு நீடித்தது.
கடந்த 7 மாதத்திற்கு முன்பு பாலமுருகன் சுசீலாவை வெளியூருக்கு அழைத்து சென்று விட்டார். இது குறித்து தங்கதுரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வெளியூருக்கு சென்ற இருவரையும் மீட்டு வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தங்கத்துரை சுசீலாவை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. சுசீலாவை சாயர்புரம் நடுவங்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
அதன் பிறகும் பாலமுருகன், சுசீலாவுடன் வைத்திருந்த தொடர்பை துண்டிக்கவில்லை. இருவரும் பேசிப் பழகி வந்தனர். இது தொடர்பாக தங்கதுரைக்கும், பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த தங்கதுரை பாலமுருகனை சரமாரியாக வெட்டினார். இதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் பலியானார். பொதுமக்கள் தங்கத்துரையை பிடித்து எப்போதும் வென்றான் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications