தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது... முதல்முறையாக ரூ 20000 ஐ தாண்டியது!

தங்கம் விலை தினமும் அநியாயத்துக்கு உயர்ந்து வருகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சி எதிரொலி, அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி என இதற்கு சர்வதேச ரீதியிலான காரணங்களைக் கூறி வருகின்றனர்.
ஆபரணத்திற்காக தங்கம் என்று இல்லாமல் சிறந்த சேமிப்பு என்று பலரும் தங்கத்தை கருத தொடங்கியதால் தங்கத்தின் விலை படுவேகமாக உயர்கிறது. இதில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் கூட படுத்துவிட்டது.
2009-ம் ஆண்டு முதல்முறையாக ஒரு பவுன் ரூ.10 ஆயிரத்தை கடந்து, விற்பனையாகியது. அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆயிரத்து 332 ரூபாய்க்கு விற்பனையானது. 2010-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் 12 ஆயிரத்து 784-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பவுன் தங்கம் 16 ஆயிரம் ரூபாயை கடந்தது.
ரூ.20 ஆயிரத்தைக் கடந்தது...
கடந்த மே மாதம் 28-ந்தேதி அன்று 17 ஆயிரம் ரூபாயை கடந்து, பவுனுக்கு 17 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 3-ந்தேதி அன்று ரூ.18 ஆயிரத்தை கடந்து 18 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் ஜெட் வேகத்திலே தங்கம் விலை உயர்ந்து வந்தது. 5 நாட்களிலேயே (கடந்த 9-ந்தேதி அன்று) முதல்முறையாக 19 ஆயிரம் ரூபாயை கடந்து, 19 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 491 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் 19 ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில், நேற்று ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 504 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.104 அதிகரித்து, 20 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது வரலாறு காணாத விலை உயர்வு ஆகும். இதன் மூலம் தங்கத்தின் விலை புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.
தங்கம் இல்லாமல் நடக்குமா கல்யாணம்?
தங்கத்தின் இந்த வரலாறு காணாத விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களையும், பெண்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தங்கம் இனி வாங்க முடியுமோ என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் எழுப்பியுள்ளது. தங்கம் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. எனினும் தங்கத்தின் மீதான மோகம் இந்திய பெண்களுக்கு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு பெண்களுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திருமணங்கள் தங்கத்தை வைத்தே நிர்ணயிக்கப்படுவதால் தங்களின் பெண் பிள்ளைகளை கரை சேர்க்க விழிபிதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இனி தங்கம் விலை குறையாதா என ஆத்திரத்தோடு கேட்கும் மக்களிடம், 'ம்ஹூம் வாய்ப்பே இல்லை' என்று குதூகலத்துடன் பதிலளிக்கும் கடைக்காரர்களைத்தான் திநகரில் பார்க்க முடிகிறது.
இந்த விலை ஏற்றத்தால் நகைக் கடைக்காரர்கள் அடைந்துள்ள லாபம் கண்ணுக்குத் தெரியாதது. என்றோ வாங்கி வைத்த இருப்பு நகைகள் இன்று இரு மடங்கு அதிக விலைக்கு விற்பதால் லாபம் கொழிக்கிறது அவர்களுக்கு!












Click it and Unblock the Notifications