ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து மும்பை டப்பாவாலாக்கள், செக்ஸ் பணியாளர்கள் போராட்டம்

கடந்த 120 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் டப்பாவாலாக்கள் தங்களது வரலாற்றிலேயே முதல் முறையாக இன்றுதான் வேலைநிறுத்தம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் கிட்டத்தட்ட 2 லட்சம் டிபன் பாக்ஸ்களை தினசரி அலுவலகங்களுக்குச் சென்று விநியோகித்து வருபவர்கள் இந்த டப்பாவாலாக்கள் என்று அழைக்கப்படும் சாப்பாடு கொண்டு சென்று தரும் ஊழியர்கள். இதுவரை இவர்கள் ஒரு நாள் கூட பணி செய்யாமல் இருந்ததில்லை. ஆனால் அன்னா ஹஸாரேவுக்காக இன்று அவர்கள் சாப்பாடு கொண்டு செல்லாமல் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆசாத் மைதானில் கூடி அவர்கள் அமைதி முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்களில் ஒருவர் கூறுகையில், நாங்கள் எங்களுக்கு எந்தக் கோரிக்கையும் வைத்து போராட வரவில்லை. அன்னாவுக்காக இங்கு கூடியுள்ளோம். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் என்று அன்னாவுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
மும்பை டிபன் பாக்ஸ் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகியான சோபன் மாரே கூறுகையில், கடந்த 120 ஆண்டு காலவரலாற்றில் நாங்கள் இதுவரை பணியிலிருந்து விலகி இருந்ததே இல்லை. மழையோ, வெயிலோ, புயலோ நாங்கள் பணியாற்றத் தவறியதில்லை. எந்தக் காரணத்திற்காகவும் நாங்கள் வேலையை நிறுத்தியதில்லை. இருப்பினும் அன்னாவின் போராட்டம் நியாயமானது என்று எங்களுக்குத் தெரிந்ததால் அவரை ஆதரித்து இன்று மட்டும் பணி செய்யாமல் போராட்டம் நடத்தினோம் என்றார்.
முன்னதாக கிட்டத்தட்ட 5000 டப்பாவாலாக்கள் இணைந்து சர்ச்கேட்டிலிருந்து ஆசாத் மைதானம் வரை பேரணியாக சென்றனர்.
3 செக்ஸ் பணியாளர்கள் போராட்டம்
இதற்கிடையே, அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து 3 செக்ஸ் பணியாளர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
சுமன் திரிபுவன், சங்கீதா செலார், மீனா பதக் ஆகிய அந்த மூன்று செக்ஸ் பணியாளர்களும் அகமதுநகரைச் சேர்ந்தவர்கள். அகமது நகர் மாவட்டம்தான்
அன்னாவின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அன்னா கைது செய்யப்பட்ட நாளில் ஜேபி பூங்காவில் உண்ணாவிரதம் இருந்த பலருடன் இவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சத்ரசால் ஸ்டேடியத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனராம்.
இதுகுறித்து சங்கீதா கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் அன்னா நடத்திய முதல் போராட்டத்திலும் நான் கலந்து கொண்டேன்.
மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக அன்னா போராடி வருகிறார். அவரைப் பார்த்து எப்படி கெளரவத்துடனும், மரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதை நான் கற்றுக் கொண்டுள்ளேன். அன்னா போராடும் வரை நானும் அவருடன் இணைந்து போராடுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications