ஜன் லோக்பால்: தனி நபர் மசோதாவாக லோக்சபாவில் தாக்கல் செய்கிறார் வருண்
டெல்லி: அன்னா ஹஸாரே குழுவினர் தயாரித்துள்ள ஜன் லோக்சபா மசோதாவை தனி நபர் மசோதாவாக லோக்சபாவில் தாக்கல் செய்யப் போவதாக வருண் காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் அன்னா ஹஸாரேவின் போராட்டம் வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது. ஒருவர் நாட்டின் நலனுக்காக போராடும்போது அதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
அன்னா ஹஸாரேவின் குழு தயாரித்துள்ள ஜன் லோக்பால் மசோதா சிறப்பானது. அதை நான் லோக்சபாவில் தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜுடன் விவாதித்துள்ளேன். இதன் மூலம் ஜன் லோக்பால் மசோதாவை குறைந்தது நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வர நான் உதவினேன் என்ற மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கும்.
இதற்கு முன்பு இருந்த சட்டங்களை விட இந்த மசோதா சிறந்தது என்பதில் சந்தேகம் இல்லை. வெளியில் இறங்கிப் போராடுவதை விட நாடாளுமன்றத்திற்குள் இந்த மசோதாவை இப்படியாவது கொண்டு செல்ல நான் விரும்புகிறேன் என்றார் வருண்.
பாஜகவைச் சேர்ந்த வருண் காந்தி உ.பி. மாநிலம் பிலிபித் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல் சமயத்தில் இவரது பேச்சுக்கள் பெரும் பிரளயத்தையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. இதையடுத்து அவர் அமைதியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஜன் லோக்பால் மசோதாவை தனி நபர் மசோதாவாக லோக்சபாவில் தாக்கல் செய்யப் போவதாக அவர் அறிவித்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications