அனிதா ராதாகிருஷ்ணன் மீது மேலும் ஒரு புகார்-வீட்டை அபகரித்ததாக பெண் குற்றச்சாட்டு!
தூத்துக்குடி: திருச்சி சிறையில் இருக்கும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது வீட்டை அபகரித்ததாக ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது இந்த வழக்கும் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷை 2 பேர் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றனர்.
இந்த வழக்கில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி வெடிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டிவிட்டதால் தான் சசிகுமார் என்னைக் கொல்ல முயன்றார். அதற்கு பழிவாங்கத் தான் அவரைக் கொன்றோம் என்று விசாரணையில் சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து குரும்பூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் மாலை அவரைக் கைது செய்தனர். அன்றிரவே அவரை திருச்சி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கடந்த மே மாதம் 21ம் தேதி ஆறுமுகநேரி நகர திமுக அலுவலத்திற்கு தீவைத்தது, அடைக்கலாபுரம் ரோட்டில் சுரேஷின் தம்பி ராஜேஷ் நடத்தி வரும் டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வீசியது ஆகிய இரண்டு சம்பவங்களுக்கு தூண்டுதலாக இருந்ததாகக் கூறி அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் திருச்செந்தூர் அருகில் உள்ள திருக்கழுர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. நரேந்திர நாயரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
ஆறுமுகநேரியில் உள்ள எனது வீட்டின் பேரில் கண்ணன் என்பவரிடம் கடன் வாங்கியிருந்தேன். அதற்கான வட்டியை என்னால் செலுத்த முடியவில்லை. அவரும், ஆல்நாத் என்பவரும் எனது வீட்டை மோசடியாக அபகரித்துவிட்டனர். இவர்கள் தாங்கள் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்று என்னிடம் மிரட்டி அனிதா ராதாகிருஷ்ணன் பெயரை பயன்படுத்தி எனது வீட்டை அபகரித்து கொண்டனர்.
இதுதொடர்பாக நான் ஏற்கனவே ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் செய்திருந்தும் நடவடிக்கை இல்லை. எனவே அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அபகரிக்கப்பட்ட எனது வீட்டை மீட்டுத் தருமாறு புகார் கொடுத்துள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications