6வது நாளாக தொடரும் ஹஸாரே உண்ணாவிரதம்-இறங்கி வருமா மத்திய அரசு?
டெல்லி: அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதம் இன்று 6வது நாளை எட்டியுள்ளது. இருப்பினும் அன்னா ஹஸாரேவின் கோரிக்கைகளை அரசு ஏற்பது குறித்து இதுவரை தெளிவான நிலை ஏதும் தென்படவில்லை.
ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹஸாரே நேற்று கூறியுள்ளார். இருப்பினும் இதை ஏற்பது குறித்து இதுவைர மத்திய அரசிடமிருந்து தெளிவான கருத்து ஏதும் வரவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கூறுகையில், வலுவான லோக்பால் மசோதா அமைய வேண்டும் என்று தானும் விரும்புவதாக கூறியுள்ளார். இருப்பினும் சட்டநடைமுறைகளுக்கு அவகாசம் பிடிக்கும் என்றும் உடனடியாக எதையும் நடத்தி விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நேற்று காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சிங் ஆரூண், நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அன்னா ஹஸாரேவின் ஜன் லோக்பால் மசோதாவை சமர்ப்பித்துள்ளார். இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஜன் லோக்பால் வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ள சில அம்சங்கள் லோக்பால் மசோதாவில் இணைக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் பின்னணியில் அன்னாவின் உண்ணாவிரதம் இன்று 6வது நாளை எட்டியது. அவருக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் அதிகரித்துள்ளன.
சென்னையில் நேற்று மெரீனா கடற்கரையில் பிரமாண்ட அமைதிப் போராட்டம் நடந்தது. மெழுகுவர்த்தி ஏந்தி நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.
அன்னாவின் உடல் நிலையை அவ்வப்போது டாக்டர்கள் குழு பரிசோதித்து வருகிறது. தற்போது அவரது உடல் நிலை ஸ்திரமாக உள்ளதாக டாக்டர்கள் குழு தெரிவித்தது.












Click it and Unblock the Notifications