ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் இயற்ற வேண்டும்: டி. ராஜா வலியுறுத்தல்
நாகர்கோவில்: ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், உள்ளேயும் ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும். நீதித்துறையிலும் ஊழல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். தேசிய அளவில் ஜுடீஷியல் கமிஷன் அமைக்க வலியுறுத்தி வருகிறோம்.
தேர்தல் முறையில் பண ஆதிக்கம், குற்றவாளிகள் ஆதிக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இடது சாரிகளுடன் சேர்ந்து பல்வேறு ஜனநாயக கட்சிகளும் இதே நிலையை வலியுறுத்துகின்றன. வரும் 23-ம் தேதி நாடு தழுவிய அளவில் கண்டன போராட்டங்களை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 9 கட்சிகள் சேர்ந்து பேசி முடிவெடுத்துள்ளன.
போர் குற்றத்திற்காக இலங்கை அரசு பகிரங்கமாக விசாரிக்கப்பட வேண்டும். ஐ.நா. குழுவும் இதனைத் தான் வலியுறுத்தியுள்ளது. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இலங்கை தமிழர் நலனில் எந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பதை விளக்க வேண்டும். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கச்சத்தீவு உடன்பாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு பல்வேறு நிலைகளில் தோல்வி கண்டுள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசால் இயலவில்லை. இந்திய பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் உள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. வேலை இல்லா திண்டாட்டமும், வறுமையும் அதிகரித்துள்ளது. இதனால் நாடு தழுவிய அளவில் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications