ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா

டெல்லியில் 7வது நாளாக இன்று அன்னாவின் உண்ணாவிரதம் தொடர்கிறது. அவருக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், கிராமங்களில் ஹஸாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியிலும் அன்னா உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நேற்று மாலையில் கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்டோர் திரண்டு அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இரவு 8 மணியளவில் ஆதரவாளர்களிடையே அன்னா பேசினார். அப்போது அவர் அரசுக்கு இறுதிக் கெடு விதித்தார். அன்னா பேசுகையில்,
இந்த அரசு தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 30ம் தேதி வரை உங்களுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் ஜன் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்துங்கள். இதைச் செய்ய முடியாவிட்டால் பதவியிலிருந்து விலகுங்கள். இனியும் பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை.
ஆகஸ்ட் 30ம் தேதி வரைதான் நாங்கள் பொறுப்போம். அதற்குப் பிறகு மிகப் பெரிய புரட்சி வெடிக்கும். நாடு தழுவிய மாபெரும் போராட்டத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்த நாட்டுக்காக நான் நிறைய தியாகங்களைச் செய்து விட்டேன். நாட்டுக்குச் சேவை செய்வதற்காக நான் திருமணம் கூட செய்யவில்லை. ஆனால் நீங்கள்தான் (ஆதரவாளர்களைப் பார்த்து) எனது குடும்பம்.
கடந்த 74 ஆண்டு காலத்தில், என் மீது எந்த களங்கமும் வந்ததில்லை. நான் சுத்தமானவன். அதுதான் ஊழலை எதிர்த்து நான் போராட எனக்கு துணை நிற்கும் ஆயுதமாகும் என்றார் ஹஸாரே.












Click it and Unblock the Notifications