மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி

தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி ஆந்திர மாநிலம் நெல்லூரில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில்,
பிரதமர் மன்மோகன் சிங்கால் சாதாரண மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடியாது. காரணம் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை. மாறாக ராஜ்யசபா வழியாக நாடாளுமன்றத்துக்குள் வந்தவர். தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் ஓட்டு போட்டு, அதில் அவர் வெற்றி பெற்றிருந்தால், மக்களைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கும்.
பிரதமர் சிறந்த பொருளாதார நிபுணர் தான். அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இவரது ஆட்சியில் இங்கு வாழும் சாதாரண அடிமட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட மன்மோகன் சிங்குக்கு, மக்களின் வறுமை பற்றியோ, சாதாரண மக்களின் அடிப்படை தேவை பற்றியோ தெரிய வாய்ப்பில்லை.
இந்த அரசு அதிகாரத்திற்கு வந்த நாள் முதலே விலைவாசி மேலே போய்க் கொண்டேயிருக்கிறது.
இந்த ஆட்சியின் காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவும், பிரதமரும்தான் பொறுபு.
ஸ்பெக்ட்ரம் ராஜா-கனிமொழி, காமன்வெல்த் கல்மாடி ஆகியோர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு பொதுக்கணக்கு குழுவின் அறிக்கையும், நீதிமன்ற நடவடிக்கையும்தான் காரணம்.
நாங்கள் (மத்திய அரசு) ஊழலுக்கு எதிரானவர்களை சிறைக்கு அனுப்பி வருகிறோம் என்று சொல்வது சுத்தப்பொய். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, அவர்கள் பதவி விலகியிருக்கிறார்கள். இதை பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங், ஏற்கனவே செய்திருக்க வேண்டும்.
ஊழல், விலைவாசி, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமையை இழந்து விட்டார் மன்மோகன் சிங். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications