அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவாக கால்களால் கார் ஓட்டிய பழனி டிரைவர்
பழனி: ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு, கால்களால் காரை ஓட்டி பழனியை சேர்ந்தவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பலத்தரப்பு மக்களும், அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பழனி திருநகரை சேர்ந்த செந்தில்குமார் (40) வித்தியாசமாக ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்காக, தனது கால்களால் காரை ஓட்டியுள்ளார். ஓட்டுநர் பயிற்சி கூடத்தின் உரிமையாளரான செந்தில், நேற்று தனது கார் சாதனையை நிகழ்த்தினார்.
இவர் நாட்டில் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு மட்டுமின்றி, இலங்கை தமிழ் பத்திரிக்கையான உதயன் ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதலை கண்டித்தும் அந்த புதுவித போராட்டத்தை நடத்தினார்.
பழனி பஸ் நிலையத்திற்கு முன் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய பின், பழனி நகராட்சித் தலைவர் ராஜமாணிக்கம் உடன் காரை ஓட்ட துவங்கினார். தனது கைகளை பின்னாக கட்டிக் கொண்டு, கால்களால் காரை ஓட்டினார். பழனி பஸ் நிலையத்தில் துவங்கிய பயணம், ரயில்வே பீடர் சாலை, பெரியநாயகியம்மன் கோயில் 4 ரத வீதி, காந்தி சாலை வழியாக சுற்றி வந்தார்.
1 மணிநேரத்தில் 10 கி.மீ.,கள் காரை காலால் ஓட்டிய செந்தில்குமார் கூறுகையில், கால்களால் காரை ஓட்ட காரில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. கைகளால் ஓட்டுவது போல, கால்களால் ஓட்டினேன்.
பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு காலால் காரை ஓட்டுவது, பின்நோக்கி ஓட்டுவது போன்ற சாகசங்களுக்கு முயற்சி செய்து வருகிறேன். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரையிலுள்ள 700 கி.மீ.,களை காரை கால்களால் ஓட்டி கடந்து, லிம்கா சாதனை படைக்கும் ஆசையும் உள்ளது, என்றார்.












Click it and Unblock the Notifications