பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கை எழுத்து பிரச்சாரமும், ஆர்பாட்டமும் நடந்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் கருணை மனுக்கள் நிராகரி்க்கப்பட்டதையடுத்து அவர்கள் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆளுநரிடம் இருந்து ஆணை வந்தவுடன் அவர்கள் தூக்கில் இடப்படுவார்கள்.
இந்நிலையில் அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் குரல் எழுப்பியுள்ளன.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வாழும் தமிழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரிமான்ட் நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சான் ஒசே, சன்னிவேல் உள்ளிட்ட பல நநரங்களில் இருந்து தமிழர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய கோரிக்கை மனுவில் கையெழுத்து வாங்கினர். இந்திய தூதரகத்தின் மூலம் இந்த கோரிக்கை மனு இந்திய அரசிற்கும், தமிழக முதல்வருக்கும் அனுப்பி வைக்க இருப்பதாக தெரிவித்தனர்.
மரண தண்டனைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போர்டுகளை ஏந்தி பிரிமான்ட் சென்ட்ரல் பூங்காவை சுற்றி ஊர்வலமாகச் சென்றனர். பல இன மக்களுக்கும் போராட்டத்திற்கான காரணத்தை ஆர்வமாக கேட்டறிந்து, தமிழர்களின் இப்போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.
இந்த ஆர்பாட்டத்தை ஒருகிணைத்த தமிழ் உணர்வாளர்கள், இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு ஆளுநர் மூலம் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications