சுரண்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் 3 நாட்களாக எரியும் தீ
சுரண்டை: சுரண்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ 3வது நாளாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே சண்முகாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு தாவர கழிவுகளை எரித்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் இங்குள்ள தாவர மரக்கழிவிகளில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.
தகவல் அறிந்ததும் சுரண்டை, தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. எனினும் தீ கொளுந்து வி்ட்டு எரிகிறது. விடிய விடியப் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.
மரக்கழிவு முழுவதும் பரந்து கிடப்பதால் பனை மர உயரத்திற்கு தீ பற்றி எரிகிறது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு தீ மேலும் பரவாமல் இருக்க மரக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று 3-வது நாளாக தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. பாளை, சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி போன்ற பகுதிகளிலிருந்து வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications