மலைகளுக்கு உள்ளே, பூமிக்கு அடியில் ஈரானின் அணு ஆராய்ச்சி மையம்!
இதனால் ஈரானின் அணு ஆராய்ச்சிகளின் நோக்கம் குறித்த சந்தேகம் மேலும் வலுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்காகவும், புற்றுநோய் சிகிச்சைக்காகவும் அணு ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளதாகவும், அங்கு யுரேனியத்தை சுத்தப்படுத்தி வருவதாகவும் ஈரான் கூறுகிறது.
ஆனால், அணு குண்டு தயாரிக்கவே யுரேனியத்தை சுத்தப்படுத்தும் வேலைகளில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
ஈரானின் மையப் பகுதியில் உள்ள நடான்ஸ் மாகாணத்தில் தான், அந் நாட்டின் முக்கிய அணு ஆராய்ச்சி மையம் உள்ளது.
இந்த மையத்தின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் எந்த நேரமும் விமானத் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சம் உள்ளது. இந் நிலையில், ஈரான் மிக ரகசியமாக தனது அணு ஆராய்ச்சி மையத்தை புனித நகரான குவாம் அருகே உள்ள போர்டோ என்ற இடத்தில் மலையைக் குடைந்து, பூமிக்கு அடியில் மிகப் பாதுகாப்பான இடத்துக்கு இடம் மாற்றியுள்ளது.
இத் தகவலை அந் நாட்டின் துணை அதிபரும் அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான பெரெய்தோன் அப்பாசி உறுதிப்படுத்தியுள்ளார். தாக்குதல்களில் இருந்து மையத்தைக் காப்பாற்ற மிகுந்த பாடுபட்டு இந்த மையத்தை பூமிக்கடியில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
யுரேனியத்தை 3.5 சதவீதம் அளவுக்கே சுத்தப்படுத்துவதாக ஈரான் கூறுகிறது. ஆனால், அதை 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே சுத்தப்படுத்தி வளப்படுத்தி வருவதாக அமெரிக்கா கூறுகிறது. அணு ஆயுதங்கள் தயாரிக்க யுரேனியத்தை மிக அதிகளவில் வளப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ஈரான் தனது ஆராய்ச்சி மையத்தை பூமிக்கடியில் இடம் மாற்றியுள்ளது அந்த நாட்டின் மீதான சந்தேகத்தை அதிகரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.













Click it and Unblock the Notifications