லோக்பாலில் வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்க அரசு முடிவு?: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இன்று விவாதித்
டெல்லி: அன்னா குழுவினரின் கோரிக்கையை ஏற்று லோக்பால் வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வர மத்திய அரசு உடன்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இன்றைக்குள் உடன்பாடு கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராம்லீலா மைதானத்தில் கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹஸாரேவின் உடல் எடை வெகுவாக குறைந்து விட்டது. இருப்பினும் அவரது நிலைமை மோசமாகவில்லை. அதேசமயம், அன்னாவின் உடல் நிலை மோசமடையும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து மத்திய அரசுத் தரப்பில் விரைவான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு அன்னா குழுவுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளது. அவரச கூட்டங்கள் அதி வேகமாக நடந்து கொண்டுள்ளன.
இந்த ஆலோசனைகளின்போது சில முக்கிய விஷயங்களில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதன்படி பிரதமர் பதவியை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசுத் தரப்பில் இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல சிபிஐ, தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியவையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரப்படும்.
இருப்பினும் நீதித்துறையை லோக்பால் வரம்பிலிருந்து விலக்கி வைக்க அன்னா தரப்பு ஒத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக நீதித்துறையை கண்காணிக்க தனிச் சட்டம் கொண்டு வரவும் மத்திய அரசுக்கு அன்னா தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. அதுகுறித்து பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியக் கோரிக்கைகளை மத்தியஅரசுத் தரப்பு, குறிப்பாக பிரதமர் பதவியை சேர்க்க ஒத்துக் கொண்டுள்ளதால், அன்னா தரப்பு திருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.இன்தக் கூட்டத்தில் மத்திய அரசு மற்றும் அன்னா தரப்புக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தை விவரங்கள் தெரிவிக்கப்பட்டு விவாதித்து முடிவெடுக்கப்படும்.
அதன் பின்னர் மத்திய அரசின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து மத்திய அரசுப் பிரதிநிதிகளும், அன்னா குழுவினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று தெரிகிறது.
இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவாலிடம் கேட்டதற்கு, மத்திய அரசுத் தரப்பில் பிரதமர் பதவியை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர தீர்மானித்திருப்பதாக உணர்கிறோம். இருப்பினும் மத்திய அரசு தனது முடிவை அறிவித்த பின்னரே அதுகுறித்துத் தெரிய வரும் என்றார்.
கிரண் பேடி கூறுகையில்,இன்றைய நாள் அன்னாவின் உடல் நலனுக்கு மிகவும் முக்கியமானது. அவரது உடல் நிலை தளர்ந்து வருகிறது. மன பலத்தால் உடல் நலிவை தாங்கிக் கொண்டிருக்கிறார். மத்திய அரசு இன்றைக்குள் நல்ல முடிவை அறிவித்தாக வேண்டும்.
ஒப்பந்தம் உருவாக்கப்பட்டால் அன்னா அதை வரி விடாமல், வார்த்தை விடாமல் முழுமையாக படித்த பின்னரே கையெழுத்திடுவார் என்றார்.












Click it and Unblock the Notifications