பிறந்த குழந்தைகளுக்கு அன்னா ஹஸாரே பெயர் சூட்டும் பெற்றோர்
டெல்லி: ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் அன்னா ஹஸாரேவின் பெயரை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி பெற்றோர் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி அன்னா ஹஸாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ள அன்னா ஹஸாரேவின் பெயர் பிரபலங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது. நாட்டு தலைவர், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்ந்த மக்கள் தற்போது அன்னா ஹஸாரேவின் பெயரை சூட்டுகின்றனர்.
டெல்லியைச் சேர்ந்த ரீத்து சிங் என்பவருக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அவர் அன்னா என்று பெயர் சூட்டியுள்ளார். இதே போன்று கடந்த சனிக்கிழமை கவுசால்பீபீ என்பவருக்கு பிறந்த குழந்தைக்கும் அன்னா என்றே பெயர் வைத்துள்ளனர். இது தவிர டெல்லியைச் சேர்ந்த 2 தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு ஹஸாரே என்று பெயரிட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த 22 குழந்தைகளுக்கு அன்னா, ஹஸாரே ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் 18 ஆண் குழந்தைகளும், 4 பெண் குழந்தைகளும் அடக்கம்.
தன் குழந்தைக்கு அன்னா என்ற பெயரை சூட்டிய சஞ்சய் பட்டேல் என்பவர் கூறுகையில், கடந்தாண்டு எனது மனைவிக்கு குழந்தை பிறந்த போது, மருத்துவமனை பணியாளர்கள் ரூ. 500 லஞ்சம் கேட்டனர். ஆனால் கடந்த வாரம் பிறந்த குழந்தைக்கு யாரும் லஞ்சம் கேட்கவில்லை. அன்னா ஹஸாரேயின் போராட்டத்தால் இது நடத்திருப்பதாக நம்புகிறேன் என்றார்.
மற்றொருவர் கூறுகையில், என் குழந்தைக்கு அன்னா என்ற பெயரை சூட்டியதன் மூலம் அவனும் நாளை இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுகிறவனாக இருப்பான் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications