'ஒரிஜினல் மார்பகமா?'-ஏர்ஹோஸ்டஸ் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மார்புகளை அழுத்தி 'சோதனை'!

இந்தோனேசியாவின் கருடா விமான நிறுவனம்தான் இந்த சோதனையைச் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஏர்ஹோஸ்டஸ் பணிக்கு விண்ணப்பித்த 12 பெண்களிடம் இவ்வாறு சோதனை செய்துள்ளது கருடா நிறுவனம்.
இதுகுறித்து பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட ஒரு பெண் கூறுகையில், ஏர்ஹோஸ்ட்ஸ் பணிக்கு விண்ணப்பித்த நான் உள்ளிட்ட 12 பெண்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்போது சோதனைக்கு வந்த டாக்டர்கள் எங்களுக்கு இயற்கையான மார்புகள் இருக்கிறதா அல்லது சர்ஜரி செய்தோ அல்லது பேட் வைத்தோ வந்துள்ளனரா என்பதை பரிசோதிக்க நிர்வாணப்படுத்தினர். மேலும் கைகளால் எங்களது மார்புகளை அழுத்தியும் பரிசோதித்தனர். எங்களது வெறும் பேன்ட் மட்டும் அணிந்தபடி மேலாடையை முழுவதுமாக கழற்றி உட்கார வைத்தனர் என்றார் அந்தப் பெண்.
தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ள கருடா விமான நிறுவனத்தின் அலுவலகத்தில்தான் இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து கருடா நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், செயற்கை மார்பகங்களுடன் விமானங்களில் பயணிப்பது ஆரோக்கியக் கேடாகும். விமானம் மேலே பறக்கும்போது காற்றழுத்தம் குறையும். அப்போது செயற்கை மார்பகங்களுடன் வருவோருக்குப் பிரச்சினை ஏற்படும். ஆரோக்கியக் கேடும் ஏற்படும். இதனால்தான் மார்பகங்கள் சோதிக்கப்பட்டன என்று விளக்கம் தந்துள்ளனர். மேலும் மார்பகங்களில் டட்டூஸ் பொறித்தவர்களுக்கும் இந்த நிறுவனம் வேலை தர முடியாது என அனுமதி மறுத்துள்ளது.
கருடா நிறுவனத்தின் இந்த மார்பக பரிசோதனை விவகாரம் பெரிதாகியுள்ளது. பல்வேறு மகளிர் நல அமைப்புகள், மகளிர் உரிமை அமைப்புகள் இந்த செயலைக் கண்டித்துள்ளன. இது தேவையற்ற சோதனை, பெண்களின் கெளரவத்தை சீர்குலைத்துள்ளது கருடா நிறுவனம் என்று அவர்கள் சாடியுள்ளனர்.
இதுகுறித்து சியோலைச் சேர்ந்த செக்ஸ் வன்முறை நிவாரண மையத்தின் கிம் டா மி கூறுகையில், இதுபோன்ற செயல்களை இந்தோனேசியாவில், அந்த நாட்டுப் பெண்களுக்கு செய்வார்களா என்பது தெரியவில்லை. தென் கொரியப் பெண்களுக்கு நிகழ்ந்துள்ள இந்தக் கொடுமை மிகவும் மோசமான செயல் என்றார்.
இதேபோல கொரியன் ஏர் நிறுவனமும் கருடா நிறுவன செயலைக் கண்டித்துள்ளது. இது மோசமான செயல் என்று அது வர்ணித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இப்படி ஒரு பரிசோதனை உலகில் எங்குமே நடந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதுதான் இப்படிக் கேள்விப்படுகிறோம். செயற்கை மார்பகம் பொருத்தியவர்களும், மார்பக பெருக்க அறுவைச் சிகிச்சை செய்தவர்களும் விமானத்தில் பறக்க முடியாது என்பது கேலிக்குரிய, அபத்தமான வாதமாகும் என்றார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் என்று கருடா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. மார்பகத்தை சோதிக்க வேண்டும் என்று எங்களது மருத்துவப் பரிசோதனைப் பட்டியலில் இல்லை.எனவே எப்படி இப்படி நடந்தது என்பது குறித்து விசாரிப்போம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையே, மார்பக பரிசோதனையை செய்த டாக்டர் ஆணா, பெண்ணா என்பது குறித்து தகவல் தெரியவில்லை.
தென் கொரியாவில் விமானப் பணிப்பெண் வேலையில் சேர பெண்களிடையே அதிக ஆர்வம் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கானோர் படிப்புகளில் சேருகின்றனர். கடுமையாக பயிற்சி எடுக்கின்றனர். அவர்களுக்கு கருடா நிறுவனத்தின் செய்கை கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications