மீனவர்கள் மாயமான வழக்கில் முன்னாள் அமைச்சரின் 4 தம்பிகள் நீதிமன்றத்தில் சரண்
சென்னை: சென்னை திருவொற்றியூரில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன் 2 மீனவர்கள் மாயமான வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் 4 தம்பிகள் நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.
கடந்த 2006ம் ஆண்டு அளிக்கப்பட்ட சுனாமி நிதியை பிரிப்பது தொடர்பாக, திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் அ.தி.மு.க.,-தி.மு.க., வினர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கே.வி.கே.குப்பம் கிராம தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி இருந்தார்.
இரு கட்சிகளிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக, அ.தி.மு.க.,வை சேர்ந்த அஞ்சப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு பின் செல்லத்துரை திடீரென மாயமானார். அடுத்த சில நாட்களில் அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவரும் மாயமானார். மாயமான இருவரது மனைவியரும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். கமிஷனரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார், அதே பகுதியை சேர்ந்த சுந்தரம்(21), டைசன்(19) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சுனாமி நிதி பிரிப்பது தொடர்பாக பிரச்சனை செய்து வந்த செல்லத்துரையும் வேலுவையும், முக்கூடல் என்ற இடத்திற்கு அழைத்து சென்று அடித்து உதைத்து, முட்புதரில் வீசினோம். எங்களோடு முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் தம்பிகளான சங்கர்(40), சொக்கலிங்கம்(38), யோபு(22), குமார், வைத்தியலிங்கம் உட்பட 7 பேர் இருந்தனர், என்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், முன்னாள் அமைச்சரின் தம்பிகள் தி.மு.க.,வட்ட செயலர் கே.பி.சங்கர், கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் மற்றும் யோபு, குமார், வைத்தியலிங்கம் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், யோபுவை தவிர மற்ற 4 பேரும் திருக்கழுக்குன்றம், திருவொற்றியூர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள யோபுவை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications