வேலூரில் மூவர் தூக்குத்தண்டனைக்கு எதிராக உரையாற்ற வருகிறார் பேராசிரியர் கிலானி
வேலூர்: இந்திய பாராளுமன்ற தாக்குதலில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்பு நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர் கிலானி ஆகஸ்ட் 30ம் தேதி வேலூரில் கண்டன உரையாற்றுகின்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிப்பட்டது. இந்நிலையில் மூவரையும் செப்டம்பர் 7 ம் தேதிக்குள் தூக்கிலிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து தமிழகத்தில் ம.தி.மு.க., பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழ் அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூக்குத் தண்டனையை எதிர்த்து மக்கள் குடியுரிமை இயக்கம் சாதி மறுப்பு இயக்கம் ஆகியவை இணைந்து வேலூரில் பெரியளவிலான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த உள்ளனர்.
ஆகஸ்ட் 30ம் தேதி நடக்க உள்ள இந்த பொதுக் கூட்டத்தில், பாராளுமன்ற தாக்குதலில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின் நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர் கிலானி மற்றும் மரண தண்டனைக்கு எதிரான முக்கிய தலைவர்கள் கண்டன உரையாற்றுகிறார். பேராசியர் கிலானி தமிழகம் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.