30 ஆண்டுகளாக அமலில் இருந்த அவசர நிலையை செப். 8 முதல் நீக்குகிறது இலங்கை
இதை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அறிவித்தார். அவர் கூறுகையில், இனியும் அவசர நிலையை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தற்போதைய அவசர நிலைச் சட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றார். செப்டம்பர் 8ம் தேதியுடன் தற்போதைய அவசர நிலை முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் அது நீட்டிக்கப்படாது என்று ராஜபக்சே கூறி விட்டதால், 30 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு வந்த அவசர நிலை முடிவுக்கு வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளாக மாதா மாதம் அவசர நிலையை இந்த நாடு நீட்டித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் இத்தனை காலமாக போரில் ஈடுபட்டு வந்த இலங்கை அரசு மற்றும் படைகளால் அவர்களை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறி வந்தனர். ராஜபக்சே அதிபர் பதவிக்கு வந்த பிறகு பலநாட்டு உதவிகள் கிடைத்ததைத் தொடர்ந்துதான் அவர்களால் புலிகளை எதிர்க்கவே ஒரளவுக்கு தெம்பு கிடைத்தது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்துடன் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக அறிவித்தார் ராஜபக்சே. ஆனால் அவசர நிலையை மட்டும் அவர் விலக்கவில்லை. மாறாக நிலைமை சரியானதும் விலக்கப்படு்ம் என்று கூறி வந்தார்.
தற்போது இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் மிகப் பெரிய நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படைகள் நடத்திய கொடூரத்தனம், அயோக்கியத்தனம், மனிதாபிமானற்ற கொடுஞ்செயல்கள் உலகம் முழுவதும் அம்பலமாகி விட்டது. இதனால் இலங்கைக்கு எதிராக நாலா புறமும் பல்வேறு நாடுகள் நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்துள்ளன. அதிலிருந்து தப்பிக்கும் வழிகளில் ஒன்றாகவே நெருக்கடி கால சட்டத்தை முடித்துக் கொள்ள ராஜபக்சே முயல்வதாக தெரிகிறது. இதன் மூலம் மனித உரிமைகளை தாங்கள் மதிப்பதாக வெளியுலகுக்குக் காட்டிக் கொள்ளலாம் என்பது ராஜபக்சே மற்றும் அவரது குழுவினரின் நினைப்பு.
ராஜபக்சேவின் இந்த முடிவுக்கு இலங்கை எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆனால் கூடவே 'கொட்டும்' வைத்துள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சி் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கூறுகையில், இந்த முடிவை வரவேற்கிறேன். ஆனால் போர் முடிந்ததும், 2009ம் ஆண்டிலேயே இதை ராஜபக்சே செய்திருக்க வேண்டும். இப்போது அறிவித்திருப்பது மிகவும் கால தாமதமான முடிவு.
அடுத்து தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வையும், மனித உரிமைத் தேவைகளையும் அரசு செய்ய வேண்டும் என்றார் அவர்.