5 மணி நேரம் தான் லிமிட்.. அதுக்கு மேல் யாரையும் வேலை வாங்க கூடாது.. மத்திய அரசு ஸ்ட்ரிக்ட் அறிவிப்பு
டெல்லி: இந்தியத் தொழிலாளர் அமைச்சகம் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது "எந்தவொரு தொழிலாளியும் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஓய்வு இடைவேளையின்றி வேலை செய்யக் கூடாது என்றும் அவர்களுக்குக் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் கட்டாய ஓய்வு இடைவேளை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வரவிருக்கும் சூழலில், கார்ப்பரேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களின் இஷ்டத்திற்கு வேலை நேரங்களை மாற்றியமைக்கக் கூடும் என்ற அச்சம் பரவலாக இருந்தது. இந்நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த தொழிலாளர் நலப் பாதுகாப்பு விதிகளை உறுதி செய்யும் வகையில் மத்தியத் தொழிலாளர் நலத்துறை முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுரங்கத் தொழில்
இதில் வழக்கமான நிறுவனங்களைத் தாண்டி, ஆபத்துகள் நிறைந்த நிலத்தடிச் சுரங்கங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான விதிகளையும் அமைச்சகம் இந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.. நிலத்தடிச் சுரங்கத் தொழிலாளர்களின் ஒரு நாள் வேலை நேரம் என்பது எந்தக் காரணத்தைக் கொண்டும் 8 மணி நேரத்தைத் தாண்டக் கூடாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு
ஏனென்றால் சுரங்கத் தொழில் என்பது மிகக் கடுமையான உடல் உழைப்பையும், பேராபத்துகளையும் கொண்டது. அங்குள்ள தொழிலாளர்கள் ஓவராக சோர்வு அடைவதைத் தவிர்க்கவும் விபத்துகளைத் தடுக்கவும் இந்த 8 மணி நேரக் கட்டுப்பாடு மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய தொழிலாளர் சட்டத்தில், பழைய சட்டங்களில் இருந்த இந்த 'கட்டாய ஓய்வு இடைவேளை' குறித்த விரிவான கட்டமைப்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் குழப்பம் இருந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
5 மணி நேரம் தான் லிமிட்
அதாவது ஒரு தொழிலாளி அதிகபட்சமாக 5 மணி நேரம் மட்டுமே தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். அதன் பிறகு கட்டாய ஓய்வு இடைவேளையாகக் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வழங்கப்பட வேண்டும். இது தவிர நிலத்தடிச் சுரங்கத் தொழிலாளர் ஷிப்ட் 8 மணி நேரம் மட்டுமே இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தில் இடைவெளி குறித்த விதிமுறைகள் இல்லாததால் இந்த ஓட்டையைப் பயன்படுத்திப் பல தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களை இடைவேளையின்றித் தொடர்ந்து வேலை வாங்கும் ஆபத்து இருப்பதாகத் தொழிற்சங்கங்கள் கவலையும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தன. இந்தச் சூழலில் தான், புதிய சட்டக் கட்டமைப்புக்கு மாறும் காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தத் தனி அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
பிரேக் ஏன் முக்கியம்?
தொழிலாளர் நல நிபுணர்கள் மற்றும் தொழில்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துவது என்னவென்றால், இடைவேளையின்றித் தொடர்ந்து வேலை வாங்குவது உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்குப் பதிலாக, தொழிலாளர்களின் சோர்வை அதிகரித்து விபத்துகளுக்கே வழிவகுக்கும் என்பதாகும். குறிப்பாக உற்பத்தித் துறை, சுரங்கம் மற்றும் கட்டுமானத் துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்யும்போது, கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கலாம். இது அவர்களின் உயிருக்கே ஆபத்தாய் முடியும். 30 நிமிட ஓய்வு அவர்களின் கவனத்தை மீட்டெடுக்கும்.












Click it and Unblock the Notifications