ரயில்வே பாலத்தில் அந்தரத்தில் தொங்கிய தீயணைப்பு வண்டியால் பரபரப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வாகனம் ரயில்வே பாலத்தில் அந்தரத்தில் தொங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாக்குமரி அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நின்ற சில படகுகளில் நேற்றிரவு தீப்பிடித்ததாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அதன்பின் நாகர்கோவிலுக்கு திரும்பும் வழியில், சுசீந்திரம் அடுத்த ஆஸ்ரமம் அருகே உள்ள ரயில்வே பாலத்தில் தீயணைப்பு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, தீயணைப்பு வாகனத்தை பின்தொடர்ந்து வந்த ஒரு வாகனம் முந்தி சென்றது.
அதற்கு வழிவிட்டபோது, தீயணைப்பு வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து, ரயில்வே பாலத்தின் பக்க தடுப்பு சுவரை இடித்து உடைத்து அந்தரத்தில் தொங்கி நின்றது. அப்போது, பாலத்தின் கீழே பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
தீயணைப்பு வாகனம் பாலத்தில் அந்தரத்தில் நிற்பதை கண்ட ரயில் டிரைவர், விபத்து ஆபத்தை தவிர்க்க, ரயிலை மெதுவாக இயக்கினார். தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் மீட்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்பு வாகனத்தில் இருந்த 3 வீரர்களும், வாகனமும் மீட்கப்பட்டது. ரயில்வே பாலத்தில் தொங்கியபடி நின்ற தீயணைப்பு வாகனத்தை கண்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications