தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி நன்றி
புதுச்சேரி: தேர்தலின் போது தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, புதுவை முதல்வர் ரங்கசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடந்து வந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது, புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல முக்கிய திட்டங்களில் சில குறைகள் இருக்கலாம்.
இதில் ஒன்று பால் தட்டுப்பாடு. மாநிலத்திற்கு 70 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படும் நிலையில், 30 ஆயிரம் லிட்டர் தான் கிடைக்கிறது. இந்த குறையை நீக்க பால் உற்பத்தியை அதிகரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தில் நிலவிவரும் விதை நெல், உரத் தட்டுபாட்டை போக்குவதன் மூலம், மாநிலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவை பெற முடியும். விவசாய உற்பத்தியை பெருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் உரம் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் சென்டாக் மாணவர்களுக்கு வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில் அது தளர்த்தப்பட்டு, உதவித்தொகையை அறிவித்துள்ளோம்.
கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஆதரவு அளித்த புதுவை மக்கள் வெற்றி பெற செய்தனர். கடந்த முறை நான் முதல்வராக இருந்த போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த போது அவர், மீண்டும் முதல்வராக வர என்னை வாழ்த்தினார்.
அதேபோல அக்கூட்டணி வெற்றிப் பெற்றதும், என்னை முதல்வராக அறிவித்தமைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த வெற்றிக்கு உறுதியாக இருந்த கூட்டணிக்கு எப்போதும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்," என்றார்.












Click it and Unblock the Notifications