அமெரிக்காவை சுழற்றியடிக்கும் ஐரீன் புயல்- நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் அவசரநிலை
நியூயார்க்: அமெரிக்காவை சுழற்றியடித்து வரும் ஐரீன் புயல் காரணமாக நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பலவற்றில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே நியூயார்க்கில் கனத்த மழையும், பலத்த காற்றும் நகரை ஸ்தம்பிக்க வைத்து வருகிறது. நியூயார்க் நகரை நோக்கி ஐரீன் நகர்ந்திருப்பதால் அங்கு பேய் மழை பெய்து வருகிறது. நகரமே கடும் மழையால் கடல் கொண்ட நகரமாக மாறிப் போயுள்ளது.
நியூயார்க் நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. வீடுகளை விட்டு வெளியேறாமல் மக்கள் பாதுகாப்பான முறையில் உள்ளனர். பல ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மின்சாரம் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டிருப்பதால் நகரி்ன் பெரும்பாலான பகுதிகள் இருளடைந்து போயுள்ளன.
ப்ரூக்ளின் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 3 லட்சத்து 70 ஆயிரம் பேரை பத்திரமான இடங்களுக்கு அனுப்பும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நியூஜெர்சி மாகாணத்தில் கிட்டத்தட்ட லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நியூயார்க் நகரையொட்டி புயல் மேலும் நெருங்கும்போது பலத்த பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு புயல் மேலும் நெருங்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்கும்போது நியூயார்க் நகரில் மிக பலத்த சேதம் தவிர்க்க முடியாதது என்று நகர மேயர் பளூம்பர்க் தெரிவித்துள்ளார். இதையடுத்து மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
புயல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு நகரங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு மாகாணங்களில் அவசர நிலையை அதிபர் பராக் ஒபாமா பிரகடனப்படுத்தியுள்ளார்.
நியூயார்க் நகரில் மட்டும் தற்போது புயலுக்கு 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல லாங் ஐலன்ட், கேப்ட்ரீ ஐலன்ட், ஓக் ஐலன்ட், ராபர்ட் மோசஸ், நியூஜெர்சி, வெஸ்ட்செஸ்டர், ப்ருக்ளின் உள்ளிட்ட பகுதிகளிலும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நியூயார்க் நகரில் 78 அவசர மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் தாக்குதலால் பாதிக்கப்படுவோர் இங்கு கொண்டு வரப்படவுள்ளனர்.