செப். 5 முதல் மீண்டும் சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்கிறது திமுக
புதுக்கோட்டை: செப்டம்பர் 5ம் தேதியிலிருந்து மீண்டும் சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்கத் திமுக முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இதைத் தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தபோது திமுக உறுப்பினர்களுக்கு சட்டப் பேரவையில் ஒரே வரிசையில் இடம் ஒதுக்காமல் வெவ்வேறு இடங்களில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டித்து கூட்டத்தொடரை திமுக புறக்கணித்தது.
இதையடுத்து மீண்டும் திமுக இக் கூட்டத் தொடரில் பங்கேற்றபோது, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பாடி லாங்க்வேஜ் மூலம் கிண்டல் செய்வதாக அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு செய்தது.
அதன் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேரவைக் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் 'சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் பொதுக் கூட்டங்களை நடத்தவும் திமுக முடிவு செய்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் இந்தக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.
இந் நிலையில் கடந்த திமுக ஆட்சி மீது அதிமுக அரசு சட்டசபையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. திமுக ஆட்சியில் போலீஸ் அதிகாரிகளுக்கு கருணாநிதியின் வீட்டு வேலைக்காரர்கள் உத்தரவிட்டனர், கருணாநிதிக்கு சட்டம் ஒழுங்கே தெரியாது என முதல்வர் ஜெயலலிதாவும், வீட்டுவசதி வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டத்தில் முறைகேடு நடந்தாக அமைச்சர் வைத்திலிங்கமும் முந்தைய திமுக அரசு மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.
ஆனால், திமுக எம்எல்ஏக்கள் அவையில் இல்லாததால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. அறிக்கைகள் மூலமாகவே திமுக இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
இந் நிலையில் அதிமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலடி தரும் வகையில் மீண்டும் சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்க திமுக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ரம்ஜான், விநாயக சதுர்த்தி விடுமுறைகளைத் தொடர்ந்து வரும் 5ம் தேதி முதல் மீண்டும் சட்டமன்றக் கூட்டத்தில் திமுக பங்கேற்க உள்ளது.












Click it and Unblock the Notifications