தூக்கு தண்டனையை ரத்து செய்வது ஜெயலலிதா கையில் தான் உள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி
நெல்லை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் 3 பேரின் உயிர் காக்கப்படுவது முதல்வர் ஜெயலலிதாவின் கையில் தான் உள்ளது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் உள்பட தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதனால் உலக தமிழர்கள் மத்தியில் ஜெயலலிதா மீதான மரியாதை உயர்ந்திருக்கிறது.
எனவே, அவருக்கு இந்த விஷயத்தில் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்துவது தமிழக முதல்வரின் கையில் தான் உள்ளது.
இதற்கு முன்பு கேரளாவில் சி.ஏ. பாலன் தூக்கு தண்டனையும், ஆந்திராவில் 2 பேரின் துதூக்கு தண்டனையும் ரத்தாகியிருக்கிறது. எனவே, இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 16-ன்படி தமிழக அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில் தூக்கு தண்டனை கைதிகள் விடுவிக்கப்படலாம். எனவே, தமிழக அரசு அதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications