விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இந்து மக்கள் கட்சிக்கு போலீஸ் திடீர் தடை
மெஞ்ஞானபுரம்: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இந்து மக்கள் கட்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (1ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தி சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைக்க, ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர்.
இந்து மக்கள் கட்சி சார்பில் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வாகைவிளை உள்பட உடன்குடி ஒன்றிய பகுதியில் 44 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தி குலசேகரபட்டினம் கடற்கரையில் சிலைகளை கரைக்கவும் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் உடன்குடி ஒன்றிய பகுதிகளில் இந்து மக்கள் கட்சி விநாயகர் சதுர்த்தி விழா நடத்த போலீசார் திடீரென தடை விதித்துள்ளனர். இது இந்து மக்கள் கட்சியினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்து மக்கள் கட்சியினர் சார்பில் 44 விநாயகர் சிலைகள் வாங்கப்பட்டு வாகை விளை பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications