அரசியல்வாதிகள் அவமதிப்பு: கிரண் பேடி, ஓம் புரிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
டெல்லி: இந்தி நடிகர் ஓம் புரி மற்றும் கிரண் பேடி ஆகியோர் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரிமை மீறல் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு இரு அவைகளும் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பபியுள்ளன.
அன்னா ஹஸாரே ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது அவருக்கு ஆதரவாக நடிகர் ஓம் பூரி பேசினார். அப்போது அவர் அரசியல்வாதிகள் படிப்பறிவற்றவர்கள், திறமையற்றவர்கள், திருடர்கள் என்று சரமாரியாகத் தாக்கினார். அரசியல்வாதிகள் சமயத்திற்கு ஏற்ப முகமூடி அணிந்து கொள்பவர்கள் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியும் தன் பங்குக்கு தாக்கிப் பேசினார். அப்போது தனது முகத்தில் முகமூடி அணிந்தார்போன்று செய்தும் காட்டினார்.
இதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதேபோல அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு மசோதாக்களை நிறைவேற்றுகின்றனர் என்று பிரஷாந்த் பூஷன் தெரிவித்ததற்கு மாநிலங்களவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
எம்.பி.க்கள் புனியா, ஜெகதாம்பிகா பால், ராம்ஷங்கர் ராஜ்பார், லால்சந்த் கடாரியா, மிர்ஸா அஸ்லாம் பெக், பிரவீன் ஏரன் மற்றும் சைலேந்திர குமார் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக மனுக்கள் அளித்துள்ளதாக சபாநாயகர் மீரா குமார் தெரிவித்தார்.
ராம்கோபால் யாதவ்(சமாஜ்வாதி) மற்றும் முகமது ஆதீப்(சுயேச்சை) ஆகியோரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மாநிலங்களவை துணை தலைவர் ரஹ்மான் கான் தெரிவித்தார்.
கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசிய ராம்கோபால் யாதவ் கூறுகையில், நடிகர் ஓம் புரி நாடாளுமன்ற உறுப்பினர்களை திருடர்கள், திறமையில்லாதவர்கள் என்று கூறியிருக்கிறார். எனவே, இது தொடர்பாக உறுப்பினர்கள் கொடுத்துள்ள மனுக்களை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். அதற்கு மற்ற உறுப்பினர்கள் மேஜையத் தட்டி வரவேற்றனர்.
தனது பேச்சுக்கு நடிகர் ஓம் புரி மன்னிப்புக் கேட்டுவிட்டார். ஆனால் கிரண் பேடி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்று அவர் தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்டு ஓம் புரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மேடையில் பேசியபோது நான் ஒரு நடிகன் என்பதை மறந்துவிட்டேன். நான் நானாக இருந்திருக்க வேண்டும். என் வார்த்தைகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் வந்தால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன் என்றார்.
நாடாளுமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்தால் நான் பதில் அளிப்பேன். ஆனால் இதுவரை எனக்கு எந்தவித நோட்டீஸும் வரவில்லை என்று கிரண் பேடி தெரிவித்தார்.
ஓம் புரி நாடாளுமன்ற உறுப்பினர்களை படிப்பறிவில்லாதவர்கள் என்று கூறியுள்ளது நாடாளுமன்ற மாண்பை குலைக்கும் செயல் என்று ஆதீப் ஆலம் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 80 சதவீதம் பேர் இளங்கலை பட்டதாரிகள், உறுப்பினர்கள் படித்தவர்களுக்கு இணையான அனுபவம் உள்ளவர்கள் என்றார்.
அன்னா ஹஸாரே ஒரு காலத்தில் லாரி டிரைவராக இருந்தார் என்பது பிரஷாந்த் பூஷனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சிவானந்த திவாரி கூறினார். இதில் இருந்தே படிப்பறிவில்லாதவர்கள் படித்தவர்களைவிட நன்கு புரிந்து கொண்டு செயல்படுபவர்கள் என்பது விளங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications