வீடு அபகரிப்பு வழக்கில் மன்னர் பரம்பரையை சேர்ந்த 2 பேர் கைது
மதுரை: மதுரையில் மன்னர் பரம்பரையை சேர்ந்த 2 பேரை, 5 கோடி ரூபாய் வீட்டை ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
மதுரை, கே.கே.நகரில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கொண்டவர் விஜயன். பெங்களூரில் ஐ.டி., இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். விஜயன் மதுரையில் உள்ள தனது வீட்டை மாணிவாசு என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு அளித்திருந்தார்.
கடந்த 2002ல் வாடகைக்கு எடுத்த மாணிவாசு வீட்டிற்கு சரியாக வாடகை செலுத்தி வந்தார். 1 ஆண்டிற்கு பின் அதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாபுசண்முகம், பிரசாத் சேதுபதி ஆகியோர் வாடகை செலுத்த ஆரம்பித்தனர். போக போக வாடகை செலுத்துவதை நிறுத்திவிட்டனர்.
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விபரத்தை அறிந்து கொண்ட விஜயன் இது குறித்து, இருவரிடமும் கேட்டார். ஆனால் பாபுசண்முகமும், பிரசாத் சேதுபதியும் வீட்டை தங்களுக்கு விற்குமாறு விஜயனை மிரட்டினர்.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கும் இந்த வீடு தி.மு.க., தேர்தல் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டது. இதற்காக, போலி ஆவணங்களை தயாரித்த பாபுசண்முகமும், பிரசாத் சேதுபதியும் மாவட்ட நிர்வாகத்தினரிடம் அனுமதி பெற்றனர்.
அதன்பிறகு விஜயன் வீட்டை காலி செய்ய கூறியதற்கு, இருவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் விஜயன் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், பாபு சண்முகத்தையும், பிரசாத் சேதுபதியையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், இருவரும் ராமநாதபுரம் மன்னரின் பாரம்பரையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.












Click it and Unblock the Notifications