1 சிறுமி உட்பட 6 சிறார்கள் குளத்தில் மூழ்கி பலி
திருவிடைமருதூர்: நீச்சல் தெரியாமல் குளத்தில் விழுந்த 5 சிறுவர்களும், 1 சிறுமியும் மூழ்கி பலியாகினர்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த வெள்ளக் கோவிலை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வில்சன்(10). அப்பகுதியில் உள்ள குளக்கரை, சுனாமி குடியிருப்பை சேர்ந்த நாகராஜ் மகள் சசிமிதா(7) உடன் விளையாடினார்.
அப்போது, திடீரென ஏற்பட்ட மண்சரிவில், இருவரும் குளத்திற்குள் விழுந்தனர். நீச்சல் தெரியாத இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். 2 பேரின் உடல்களும் இன்று காலையில் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.
கும்பகோணம் அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துக்குமார்(50). இவரது மகன்கள் அரிகரன் மேகலிங்கம்(11) ஆதிவராகன்(10). பள்ளி மாணவர்களான இருவரும், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் நடந்த விழாவிற்கு சென்றனர். அப்போது நீச்சல் தெரியாத 2 பேரும் கோவில் குளத்தில் குளித்தனர். இதில், 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
வேதாரண்யம் தாணி கோட்டகம் காலனி தெருவை சேர்ந்த குமார் மகன் தமிழ்மணி(6). அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் ஜெனின்ராஜ்(9). 2 பேரும் அந்த பகுதியில் உள்ள குளக்கரையில் விளையாடினர். அப்போது குளத்தில் மண் சரிந்ததில் 2 பேரும், தண்ணீரில் தவறி விழுந்தனர். இதில் நீரில் மூழ்கிய இருவரும் இறந்தனர்.