ராம்தேவ் மீது அன்னியச் செல்வாணி மோசடி வழக்குப் பதிவு- ஸ்காட்லாந்து தீவு விவகாரத்திலும் சிக்குகிறார்

ராம்தேவும், அவரது அறக்கட்டளை நிறுவனங்களும் அன்னியச் செல்வாணி சட்டத்தை மீறி நடந்து கொண்டிருப்பதாக அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ள வழக்கு கூறுகிறது. மேலும் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவை ராம்தேவுக்கு நன்கொடையாக தரப்பட்ட விவகாரத்தில் ராம்தேவுக்கு பெரும் சிக்கல் எழலாம் என்று தெரிகிறது. இந்த தீவை இங்கிலாந்தைச் சேர்ந்த பெரும் பணக்கார இந்திய தம்பதி ஒன்று நன்கொடையாக கொடுத்ததாக ராம்தேவ் கூறுகிறார்.
இந்த தீவு தொடர்பான விவரங்களை அளித்து உதவுமாறு இங்கிலாந்து அதிகாரிகளுக்கு கடந்த மாதத்தில் அமலாக்கப் பிரிவு கடிதம் எழுதியிருந்தது. இந்தத் தீவின் பெயர் தி லிட்டில் கம்ப்ரே தீவு என்பதாகும். இங்கிலாந்து போகும்போது இந்தத் தீவில்தான் ராம்தேவ் தங்குவாராம்.
இந்த தீவின் மதிப்பு 2 மில்லியன் டாலர் என்று ராம்தேவ் தரப்பு கூறுகிறது. ஆனால் இதன் உண்மையான மதிப்பு 20 மில்லியன் டாலருக்கும் மேல் இருக்கும் என்பது அமலாக்கப் பிரிவின் வாதம்.
மேலும் ராம்தேவும், அவரது அறக்கட்டளைகளும் வெளிநாடுகளில் வைத்துள்ள வங்கிக் கணக்குகளுக்கு முறையற்ற வகையில் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் அமலாக்கப் பிரிவு கூறுகிறது. இதற்கான ஆதாரங்களையும் அது கண்டுபிடித்துள்ளது. ரூ. 7 கோடி அளவுக்கு இதுபோல மோசடி நடந்திருப்பதாக கூறி அது தொடர்பாகவும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு 3 லட்சம் டாலரும், ஆப்பிரிக்காவின் மடகாஸ்கரில் உள்ள ஒரு வங்கிக்கு 80,000 டாலரும் முறைகேடான வகையில் போயிருப்பதாக அமலாக்கப் பிரிவு கூறுகிறது.
இந்த புகார்கள் மற்றும் வழக்குகள் தொடர்பான விசாரணையை அமலாக்கப் பிரிவு முடுக்கி விட்டிருக்கிறது. இதையடுத்து அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஆனால் தன் மீதான அனைத்துப் புகார்களையும் ஒரே வரியில், நான் தவறு செய்யவில்லை. அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என்று மறுத்துள்ளார் ராம்தேவ்.












Click it and Unblock the Notifications