அன்னா ஹஸாரே கைது செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு- சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
டெல்லி: அன்னா ஹஸாரே ஆகஸ்ட் 16ம் தேதி கைது செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துத் தள்ளுபடி செய்தது.
ஆகஸ்ட் 16ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருந்தார் அன்னா. ஆனால் டெல்லி போலீஸார் பெருமளவில் நிபந்தனைகளை விதித்தனர். இதை ஏற்க மறுத்தார் அன்னா. இதையடுத்து 16ம் தேதி அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அன்னா கைது செய்யப்பட்டதை எதிர்த்து பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் சதாசிவம் மற்றும் பி.எஸ்.செளகான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்ட யாருமே கோர்ட்டுக்கு வரவில்லை. இப்படி இருக்கையில் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், கைது நடவடிக்கை சமூகமான முறையில் தீர்க்கப்பட்டு விட்டது. பிரச்சினை எல்லாம் முடிந்த பின்னர் இந்த வழக்கை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது என்றும் நீதிபதிகள் கூறினர். அதேசமயம், அன்னா ஹஸாரேவோ அல்லது அவரது அணியைச் சேர்ந்தவர்களோ இதுதொடர்பாக வழக்கு தொடர விரும்பினால் தாராளமாக தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications