தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கசாப் கடிதம்- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் மும்பை தனி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பஹீம் அன்சாரி மற்றும் சபாஹுதீன் ஷேக் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. இந்த மனு இன்று 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.
அப்போது கசாப் எழுதிய கடிதமும் இதே நீதிபதிகளால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பாம்பே உயர்நீதிமன்றம் உறுதி செய்த தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கசாப் தனது கடிதத்தில் கூறியுள்ளான்.
2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, மும்பைக்குள் புகுந்த பத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 3 நாட்கள் நடந்த இந்த கொடூரத் தாக்குதலின் இறுதியில் 9 பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் மட்டும் பிடிபட்டான்.
அவனுக்கு மும்பை தனி நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. அதை பாம்பே உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளான் கசாப்.