அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்!
சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வியில் சன், விஜய் போன்ற கட்டணச் சேனல்களையும் விரைவில் ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு நேற்று தொடங்கியது. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் இந்த கேபிள் டி.வி. சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாதக் கட்டணமாக ரூ.70 வசூலிக்கப்படுகிறது.
இதில். ஜெயா டி.வியின் அனைத்து சேனல்கள், பொதிகை, மெகா டி.வி, வசந்த் டி.வி, இமயம், கலைஞர் டி.வி. உள்ளிட்ட இலவச சேனல்கள் டிஜிட்டல் தரத்தில் ஒளிபரப்பாகி வருகின்றன.
ஆனால், சன் டி.வி, விஜய் டி.வி, ராஜ் டி.வி, விளையாட்டுச் சேனல்கள் உள்ளிட்ட கட்டண சேனல்கள் அதில் ஒளிபரப்பாகவில்லை.
கட்டண சேனல்களை எவ்வளவு கட்டணம் செலுத்திப் பெறுவது என்பது குறித்து முடிவெடுக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தக் குழு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி கட்டண சேனல்களுக்கான கட்டணங்களை முடிவு செய்யும்.
இதைத் தொடர்ந்து கட்டண சேனல்கள் அரசு கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பாகும். இவ்வாறு, கட்டணச் சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.70ல் எந்த மாற்றமும் இருக்காது.
தற்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் 34,344 கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஒ.க்கள் சேர்ந்துள்ளனர். இவர்களிடம் 1 கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன. 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
சென்னையிலும் படிப்படியாக அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications