புதுவை போலீசார் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: சி.பி.எம்
புதுவை: சமூக விரோத கும்பலுடன் தொடர்பு வைத்துள்ள புதுவை போலீசார் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுச்சேரியில் நடந்த சட்டபேரவை தேர்தல் காலம் தவிர முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும், தற்போது ஆட்சியில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியிலும் கொலை, கொள்ளைகள் உள்ளிட்ட சமூக குற்றங்கள் பெருகி வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு மே முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரை 20 கொலைகள் நடந்துள்ளது. வழிப்பறி மற்றும் செயின்பறிப்பு என 27 சம்பவங்கள் நடந்துள்ளன. வீடு புகுந்து திருடுதல், வாகன திருட்டு உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கும்பல்களுடன் சில காவல்துறை அதிகாரிகள் தொடர்பு வைத்துக் கொண்டு கொள்ளையில் பங்கு போட்டு கொண்டதாகவும், திருட்டுப் பொருளை வாங்கியவர்களிடம் மிரட்டி பெரும் பணம் பறித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் நீண்டகாலமாக நடந்து வருகிறது.
இதுபோன்ற சமூகவிரோத கும்பலோடு தொடர்பு வைத்து, கொள்ளையில் பங்கு போட்டு கொள்ளும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும். இதில் உயர் பதவியில் உள்ள சில அதிகாரிகளை பாதுகாப்பதற்காக அப்பாவி காவலர்களை காவு கொடுக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது. இதனால் தான் சி.ஐ.டி., பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால், இந்த புகாரில் அந்நிய நாட்டு ரூபாய்களும் தொடர்பு உள்ள புகார்களாக இருப்பதால் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications