ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி-விக்கிலீக்ஸ்

இதுதொடர்பாக அந்தத் தகவலில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருந்த டென்னிஸ் ஹாப்பர் அனுப்பிய கேபிளில், மூத்த காங்கிரஸ் உறுப்பினர் சிவப்பிரகாசம் என்பவர் தன்னிடம் பேசியது குறித்த தகவல்களை வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளார்.
அதில் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் சற்றும் பொருத்தமில்லாதவர். அவர் ஒரு மோசமான பிரதமராக இருப்பார். அவர் அடிப்படையில் ஒரு அதிகாரி. விலைவாசிப் பிரச்சினையால் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
மேலும் பிரகாசம் கூறுகையில், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் பதவிக்கு போட்டியிட தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அர்ஜூன் சிங், கருணாநிதியைக் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும் அதற்கு கருணாநிதி ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக சோனியா காந்தி பிரதமராக விரும்புவதாக கூறினார் என்றார்.
அதேபோல தனது மகள் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வருவதில் கருணாநிதிக்கு விருப்பம் இல்லை என்றும், அவருடைய தாயார் ராஜாத்தி அம்மாளின் தொடர் வற்புறுத்தல் காரணமாகவே கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி சீட்டை கருணாநிதி கொடுத்ததாகவும் சிவப்பிரகாசம் கூறியுள்ளார்.
முதல் மனைவியான தயாளு அம்மாளின் இரு மகன்களான அழகிரி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் செல்வாக்கோடு இருப்பதைப் பொறுக்க முடியாமல்தான் மகள் கனிமொழியை அரசியலுக்கு கொண்டு வர ராஜாத்தி அம்மாள் துடித்ததாகவும் சிவப்பிரகாசம் கூறியதாக ஹாப்பர் தனது கேபிளில் கூறியிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications