சிறிய ரக விமானங்கள் மூலம் அமெரிக்காவை தாக்க அல்கொய்தா திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
வாஷிங்டன்: 9/11 தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அல் கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்கா மீது சிறிய ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அந்நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அல்கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் பென்டகன் கட்டிடங்கள் மீது விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இந்த கொடூர சம்பவம் நடந்து வரும் 11-ம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
இதற்கிடையே 10-ம் ஆண்டு நினைவு நாளில் அல்கொய்தா அமெரிக்காவைத் தாக்க திட்டமிட்டிருந்தது அப்போத்தாபாத்தில் உள்ள பின் லேடன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரிய வந்தது. இந்நிலையில் வரும் 11-ம் தேதி அல் கொய்தா சிறிய ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய ரக விமானங்களைக் கண்டால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நடத்த அல் கொய்தா தீவிரவாதிகள் சிறிய ரக விமானங்களை ஓட்டி பயிற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கப் படைகள் அல் கொய்தா தலைவர் பின் லேடனைக் கொன்றதால் அதற்காக பழிவாங்கும் நடவடிக்கையில் அந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications