சட்டசபை மரபுகள் எல்லாம் ஒவ்வொன்றாக விடைபெற்றுக் கொண்டிருக்கின்றன-கருணாநிதி

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
சட்டபேரவை - தலைமைச்செயலக கட்டிடங்களை இன்றைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்பவும், நவீன வசதிகளுடனும் கட்டியமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு; அண்ணாசாலையில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இடத்தேர்வு செய்து, 500 கோடி ரூபாய் அளவுக்கு அரசு பணத்தை செலவழித்து, உலகத்தரத்தில், கட்டிடங்களை கட்டி முடித்து ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டு, இடைக்கால நிதிநிலை அறிக்கை வழங்கப்பட்டு, முதலமைச்சர்-ஏனைய அமைச்சர்களின் அலுவலகங்கள் பணியாற்ற ஆரம்பித்தபோது தான், சட்டப்பேரவைக்கான தேர்தல்கள் வந்தன.
தேர்தல்கள் முடிந்து அ.தி.மு.க. வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்னரேயே, யாரையும் கலந்தாலோசிக்காமல், கழக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, சட்டப்பேரவையையும் தலைமைச் செயலகத்தையும், பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே அமைத்துக்கொள்வதாக அறிவித்தவர் ஜெயலலிதா.
இவ்வளவு பெரிய கொள்கை முடிவினை மேற்கொள்வதற்கு முன்; அமைச்சரவையை கூட்டி, விரிவாக விவாதிக்க வேண்டாமா? தோழமை கட்சிகளுடனாவது கலந்தாலோசனை செய்து கருத்தறிய வேண்டாமா?
மாணவர்கள் அனைவரும் ஒரே தரமான சமமான கல்வியைப்பெறுவது தான் சோஷலிச சமுதாயம் என்ற நோக்கில்; கழக ஆட்சிக்காலத்தில் சட்டத்தை நிறைவேற்றி, அதனை படிப்படியாக நடைமுறைப்படுத்தலாம் என்று முடிவு செய்து, தொடக்கத்தில் முதல் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் 2010-11-ம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 2011-2012-ம் கல்வி ஆண்டு முதல் மற்ற வகுப்புகளுக்கு விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
ஆட்சி பொறுப்பேற்ற இரண்டே நாட்களில் சமச்சீர் கல்வி திட்டத்தை ஜெயலலிதா அரசு முதல்கூட்ட தொடரிலேயே ரத்து செய்வதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. அ.தி.மு.க.வின் தோழமை கட்சிகளான கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும்கூட; விரிவான விவாதங்களுக்கு இடமளிக்காமல், சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி கொண்டது - சமம், சமத்துவம் என்பவற்றில் எல்லாம் சற்றும் நம்பிக்கையில்லாத அ.தி.மு.க.
நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வழங்குவதற்கான நாள் குறிப்பிட்டு, அறிவிக்கை செய்ததற்கு பிறகு, 4000 கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு வரிவிதிப்புகளை அ.தி.மு.க. ஆட்சியினர் அறிவித்தனர். சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கும், சட்டப்பேரவை பாரம்பரிய மரபுகளுக்கும் மதிப்பளிப்பவர்கள், இந்த வரி விதிப்புகளை நிதிநிலை அறிக்கையிலேதான் இணைத்து அறிவித்திருக்க வேண்டும்.
கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் - விவசாயிகள் சமூக பாதுகாப்பு மற்றும் நலச் சட்டம்.அ.தி.மு.க. ஆட்சியினர், விவசாயிகளுக்கும் விவசாய குடும்பங்களுக்கும் பாதுகாப்பும் நலத்திட்டங்களும் வழங்கிடும் இந்த சட்டத்தை-கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதால் ரத்து செய்தனர்.
திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத்திங்கள் முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என்பது, ஒட்டு மொத்தமாக எல்லா தமிழறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால்; தைத்திங்கள் முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்துள்ளது'' என்று 1-2-2008 அன்று சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியினர், எந்தவித விவாதமும் இன்றி, சட்டமன்றத்தில் ரத்து செய்தனர்.
தமிழக சட்டமன்றத்திற்கென்று சான்றாண்மை மிக்க மரபுகள் உண்டு. அந்த மரபுகளெல்லாம் இன்றைக்கு ஒவ்வொன்றாக விடைபெற்று கொண்டு இருக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications